Archives: ஜனவரி 2018

உறைந்த பனியைப்போல வெண்மை

கடந்த டிசம்பர் மாதத்தில் நான் என் குடும்பத்தோடு மலைப் பகுதிக்குச் சென்றோம். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுதும் வெப்பமண்டலப் பகுதியிலேயே வாழ்ந்ததால் முதல் முறையாக நாங்கள் உறைந்த பனியையும்  அதன் அற்புத அழகையும் காண முடிந்தது. வெள்ளை போர்வை போர்த்தியதைப் போல காட்சியளித்த வயல் வெளிகளைக் கண்ட எனது கணவர், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும்” (ஏசா. 1:18) என்ற வசனத்தைக் குறிப்பிட்டார்.

சிவேரென்பதின் அர்த்தம் என்ன என்பதை எங்களுடைய மூன்று வயது மகள் கேட்டதோடு, “சிவப்பு நிறம் கெட்டதா? எனவும் கேட்டாள். பாவம் என்பது தேவன் வெறுக்கும் காரியம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இந்த வசனம் வெறும் நிறத்தை மட்டும் குறிப்பிடவில்லை, இங்கு தீர்க்கதரிசி விளக்குவது என்னவெனின், ஆழ்ந்த சிவப்பு நிறச்சாயம் ஒரு சிறிய பூச்சியின் முட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆடைகள் இந்த ஆழ்ந்த சிவப்பு சாயத்தில் இருமுறை சாயமேற்றப்படுகின்றன. எனவே இந்த நிறம் நிரந்தரமாக ஒட்டிவிடுகிறது. மழையோ, அல்லது எப்படித் துவைப்பதாலேயும் அந்த நிறத்தை எடுக்க முடியாது. பாவமும் அப்படியே தான். மனித முயற்சியால் நம் பாவத்தை நீக்க முடியாது. அது இருதயத்தில் பதிந்து விடும்.

தேவனால் மட்டுமே இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்க முடியும். இந்த மலையைப் பார்க்கும் போது, ஒரு வியத்தகு தூய வெண்மையைக் காண்கிறோம். ஆழ்ந்த சிவப்பில் சாயமிடப்பட்ட ஒரு துணியைத் தேய்ப்பதாலோ அல்லது எந்த நிற நீக்கியினாலோ இந்த தூய வெண்மையைக் கொண்டு வரவேமுடியாது. பேதுருவின் போதகத்தை நாம் பின்பற்றும் போது, ‘உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்” (அப். 3:20) தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வைத் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் தியாகம் மட்டுமே நமக்கு ஒரு தூய உள்ளத்தைத் தர முடியும். இது எத்தனை பெரிய ஈவு.

வல்லவரும், அணுகக்கூடியவரும்

என்னுடைய தாயாருக்கு புற்றுநோய் என்ற அறிக்கை வந்த போது, என் கணவர் வேலைக்குச் சென்று விட்டிருந்தார். நான் அவருக்கும், சில நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இச்செய்தியைத் தெரியப்படுத்தினேன். என் முகத்தை நடுங்கும் கரங்களால் மூடிக்கொண்டு “எனக்கு உதவும் கர்த்தாவே” என்று விம்மி அழ ஆரம்பித்தேன். நான் முற்றிலும் தனிமையை உணர்ந்த அந்த நேரத்திலேயே தேவன் என்னோடிருந்து என்னைத் தேற்றி, என்னருகில் இருக்கிறார் என்ற உத்திரவாதத்தை எனக்குத் தந்தார்.

என் கணவர் உடனே வீட்டிற்கு வந்தார். என்னுடைய நண்பர்கள் உறவினரின் ஆதரவும் எனக்குக் கிடைத்தது. நான் தேவனுக்கு நன்றி கூறினேன். எங்கெங்கிருந்தும், எவ்வெப்பொழுதும் நாம் அவருடைய உதவியைக் கேட்கும் போது, தயாராகவும் உண்மையுள்ளவராகவும் வந்து நம்மை அமைதிப்படுத்தும் அவருடைய பிரசன்னத்தை, நான் அந்த முதல் சில மணித்துளிகள் தனிமையாக துயருற்றபோது உண்ர்ந்தேன்.

சங்கீதம் 46ல், சங்கீதக்காரன் தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், அனுகூலமான துணையுமானவர் எனத் தெரிவிக்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் குழப்பமாக இருப்பதை நாம் உணரும் போதும் நாம் நம்பியிருந்த உறுதி யாவும் நொறுக்கப்பட்ட போதும், நாம் பயப்படத் தேவையில்லை (வச. 2-3) தேவன் தள்ளாடுவதில்லை (வச. 4-7). அவருடைய வல்லமை உண்மையும் செயல் திறனுமுள்ளது. (வச. 8-9) அவர் நம்மை முடிவில்லாமல் காப்பவர். அவருடைய மாறாத தன்மையின் மீது நமக்கு நம்பிக்கையைத் தருகிறார் (வச. 10). நமக்கு உறுதியான பாதுகாப்பாக அவர் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் (வச. 11).

ஜெபத்தில் ஒருவரையொருவர் தாங்கவும், ஊக்குவிக்கவுமே, தேவனைப் பின்பற்றுகிறவர்களை அவர் உருவாக்கினார். அவர் வல்லவரும், எப்பொழுதும் நமக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறார் என்ற உறுதியை நமக்களிக்கின்றார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நமக்கு உதவி செய்ய, அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என நாம் அவரை நம்பலாம். அவருடைய பிள்ளைகள் மூலமாயும், அவருடைய பிரசன்னத்தாலும் அவர் நம்மைத் தேற்ற வல்லவராயிருக்கிறார்.

ஒரு சிறு குழந்தையைப் போல

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மாலையில் என்னுடைய இரண்டு வயது மகளுடன் இரவு ஜெபத்தை முடிக்கும் போது, என் மகள் என் மனைவியிடம் ஒரு வியக்கத்தக்க கேள்வியைக் கேட்டாள். “அம்மா, இயேசு எங்கேயிருக்கிறார்? அதற்கு என் மனைவி லுஆன், “இயேசு கிறிஸ்து மோட்சத்திலிருக்கிறார், மேலும் அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். இப்பொழுது நம்மோடும் இருக்கிறார். நீ அவரை என் இருதயத்தில் வாரும் என்று அழைத்தால் அவர் உன் இருதயத்திலும் இருக்க முடியும்” என்று கூறினாள்.

“நான் இயேசு என் இருதயத்தில் இருக்க விரும்புகிறேன்.”

“ஒரு நாள் நீ அவரை வரும்படி கேள்.”

“நான் இப்பொழுதே அவர் என் இருதயத்தில் வரும்படி கேட்பேன்.”

எனவே என்னுடைய சிறிய மகள் சொன்னாள், “இயேசுவே, தயவு கூர்ந்து என் இருதயத்தினுள் வாரும். வந்து என்னோடிரும்” அன்று முதல் இயேசுவோடு அவளுடைய விசுவாச பயணம் துவங்கியது.

இயேசுவின் சீடர் பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாய் இருப்பான் என்று கேட்டபோது, அவர் ஒரு சிறு பிள்ளையை தம்மிடத்தில் அழைத்து அவர்கள் நடுவே நிறுத்தி (மத். 18:1-2) “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போலாகாவிட்டால் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்… இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். (வச. 3-5) என்றார்.

இயேசுவின் கண்கள் பார்க்கின்ற படியே நாமும் ஒரு நம்பிக்கையுள்ள குழந்தையை நம் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவருக்கு தன்னுடைய இருதயத்தைத் திறக்கிற அனைவரையும் வரவேற்க கற்பிக்கப்பட்டுள்ளோம். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். பரலோகராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று இயேசு சொன்னார் (19:14)

மகிழ்ச்சி

நான் ஒரு புதிய காலநிலையை அடைகிறேன். முதிர்வயதின் குளிர்காலம் இன்னும் அதற்குள் வரவில்லை. ஆனால், நான் இன்னமும் அதை அடையவில்லை. வருடங்கள் வேகமாக குதித்து ஓடிக்கொண்டிருந்தாலும், நான் அவற்றின் வேகத்தைச் சற்று குறைக்க விரும்பினேன். எனக்குள் என்னைத் தாங்குகின்ற மகிழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேவன் எனக்குத் தருகின்ற ஒரு புதியநாள். நானும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “கர்த்தரைத் துதிப்பதும்… காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்” (சங். 92:1,3) என்று சொல்லுகிறேன்.

என் வாழ்வில் போராட்டங்களும் வேதனைகளும் இருந்த போதிலும், மற்றவர்களின் கஷ்டங்கள் சில வேளைகளில் என்னை மேற்கொள்கின்றன. தேவன் என்னையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து பாட பெலப்படுத்துகிறார்” உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன் (பாடுவேன்) (வச. 4). தேவன் தந்த ஆசிர்வாதங்களுக்காக, நமது குடும்பம், நண்பர்கள், மேலும் திருப்தியளிக்கக்கூடிய வேலை ஆகியவற்றினை அவருடைய எழுச்சியூட்டும் வார்த்தைகளுக்காகவும் மகிழ்ச்சியடைவோம். தேவன் நம்மை அதிகமாக நேசித்ததினால், நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார். நமக்கு மகிழ்ச்சியைத் தந்தார். மெய்யான மகிழ்ச்சியின் மூலக்காரணராகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார் (ரோம. 15:13). தேவனாகிய கர்த்தராலே “நீதிமான் பனையைப் போல் செழித்திருப்பான்… அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங். 92:12-15).

இந்த கனி என்பதென்ன? நம்முடைய வாழ்க்கைச் சூழல் அல்லது காலம் எப்படியிருந்தாலும், நம்முடைய வாழ்வினாலும் நாம் பேசும் வார்த்தையினாலும் அவருடைய அன்பிற்கு எடுத்துக்காட்டாயிருப்போம். நம் தேவனைத் தெரிந்துகொள்வதும், அவருக்காக வாழ்வதும் அவரைப் பற்றி பிறருக்குச் சொல்வதுமே உண்மையான மகிழ்ச்சி.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.